விடுதலைப்புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த இளைஞனின் கைது! டக்ளஸிடம் உதவிக்கோரியுள்ள பெற்றோர்..

0
161

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புப்பட்ட ஆடை ( ரீசேர்ட்) அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் நேற்று (01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து மகனின் விடுதலை குறித்து கவனம் செலுத்துமாறு உதவிக்கோரியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலைமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதுடன்,தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு

கடந்த 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாமம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு அப்பிரதேசத்தினை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன் (வயது – 23) என்ற இளைஞன் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் மற்றும் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்து சென்றுள்ளார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.