நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை: மீண்டும் ஆரம்பம்

0
39

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி செல்கிறது.

அங்கு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துக் கொண்டு நாகை செல்லும் கப்பல் மே 11 திகதி அங்கிருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடும்.

மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையைச் சென்றடையும்.

இரு வழிப் பயணத்துக்கு அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் மொத்தமாக 150 இருக்கைகள் இருப்பதாகவும் ஒரு வழிப் பயணத்துக்கான நேரம் நான்கு மணித்தியாலம் எடுக்கும். அத்தோடு ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும்.

கப்பலின் நுழைவுச்சீட்டு விற்பனை முகவர் நிலையம் யாழ் மருத்துவமனை வீதியில் இயங்கும் எனவும் சென்னை, திருச்சி ஊடாக சர்வதேச பயண ஒழுங்குகளை செய்வோரின் வசதிக்காகவும், ஏனையோரின் இலகுவான அணுகுமுறைக்காகவும் நேரடியாக இணையத்திலும் நுழைவுச்சீட்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.