பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக இந்தியர் கைது

0
148

கனடாவிலிருந்து அழைப்பதாகக் கூறிய இளம்பெண் ஒருவரை நம்பி இந்திய ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவிலிருந்து அழைப்பதாக கூறிய இளம்பெண்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் சத்யேந்திர சிவால் (Satyendra Siwal, 27).

கனடாவிலிருந்து அழைப்பதாகக் கூறிய இளம்பெண் ஒருவருடன் இணையம் வாயிலாக பழகி வந்துள்ளார் சிவால். அந்தப் பெண் சிவாலிடம் இருந்து இந்திய ராணுவம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்பான ரகசிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலாக அவருக்கு பணம் கொடுப்பதாக அந்தப் பெண் கூற, சபலமும் பண ஆசையும் மேற்கொள்ள அந்தப் பெண் கேட்ட தகவல்களை அவருக்குக் கொடுத்துவந்துள்ளார் சிவால்.

திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர் கைது

தனது உறவினர் ஒருவருடைய திருமணத்துக்காக இந்தியாவிலுள்ள லக்னோவுக்கு வந்த சிவாலை, தயாராக காத்திருந்த இந்திய பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

விசாரணையில், தான் அந்தப் பெண்ணுக்கு இந்திய ராணுவம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்பான ரகசிய தகவல்களைக் கொடுத்ததாக சிவால் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவரது வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பான கேள்விகளுக்கு சிவால் சரியான விளக்கமளிக்கவில்லை.

ஆகவே, அவரது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களைத் தருமாறு இந்திய அதிகாரிகள் மாஸ்கோ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

யார் அந்தப் பெண்?

இதற்கிடையில் சிவாலை கனடாவிலிருந்து அழைப்பதாகக் கூறி தொடர்பு கொண்ட பெண் கனேடியரே அல்ல. அவர் பாகிஸ்தான் உளவு ஏஜன்சியான ஐ எஸ் ஐ அமைப்பைச் சேர்ந்தவர்.

இப்படி பெண்கள் மூலம் ஆசை காட்டியும், பண ஆசை காட்டியும் இந்திய ராணுவ ரகசியங்களைப் பெற முயல்வதை பாகிஸ்தான் வழக்கமாகவே கொண்டுள்ளது.

தற்போது சபலமும் பண ஆசையும் கொண்ட சிவால் அந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிவால் மீது பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தேசத்துக்கு எதிராக சதி மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.