திருச்சி முகாமில் 14 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்: இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை

0
137

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தன்னை முகாமிலிருந்து விடுவித்து, லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால் அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி முருகனின் மனைவி நளினி தலைமைச் செயலர், திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

தொடர்ந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் மற்றும் முருகனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டதை அடுத்தே முருகன் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டார்.

திருச்சி முகாமில் முருகன், மற்றும் ராபர்ட் பயாஸ் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் தங்களை குடும்பத்துடன் சேர்க்குமாறு உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

தன்னை குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரி கடந்த 29ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர்.

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு தீர்மானம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழங்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை ஒரு வாரக்காலத்திற்குள் பிறப்பிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் தாயகத்தில் உள்ள தமது தாயாரை பார்ப்பதற்கு இலங்கை செல்ல அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத்தூதரகம் அனுப்பியுள்ள நிலையில் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆவணம் கிடைக்கப் பெற்ற பின்னர் இலங்கைக்கு சாந்தனை அனுப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாந்தனை தாயத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து முருகனின் கோரிக்கைகளும் ஏற்று லண்டனில் குடும்பத்துடன் குடியமர்வதற்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.