தீபாவளிக்கு முன்னதாக றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின மக்கள் தாக்குதல்; உடன் தலையிட்ட இ.தொ.கா

0
123

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு றைகம தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் உடன் தலையீடு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் இளைஞர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

“களுத்துறை மாவட்டம் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளியை முன்னிட்டு நகர்பகுதி கடைகளுக்கு அல்லது தோட்டத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதியில் வாழும் சில பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளனர்.

பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதலில் பலர் காயங்களுக்கு உள்ளானதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு செய்தனர்.

இதுதொடர்பில் விரைந்து செயல்பட்ட செந்தில் தொண்டமான் மேல் மாகாண ஆளுநருக்கு அழைப்பை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளதுடன் இவ்வாறு தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் அது தமிழ், சிங்கள முறுகல்களுக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண ஆளுநர், செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துடன் மேல் மாகாண இ.தொ.கா பிரதிநிதிகளுக்கும் மேல் மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

அதன் பிரகாரம் இ.தொ.காவின் உபத் தலைவர்களான திருகேதிஸ், ராஜமணி பிரசாத் ஜீவானந்தம் மற்றும் ஜீவா மாகிரட் ஆகியோர் மேல்மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து முறைப்பாட்டை கையளித்திருந்தனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கொண்டு சென்றதுடன் சம்பவம் தொடர்பில் றைகம பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டியதுடன் உடனடியாக இந்த பிரச்சினைக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனையடுத்து றைகம பகுதியில் பொலிஸாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.