இந்தியாவுக்கு போட்டியாக விண்வெளி முயற்சியில் ஈடுபடும் ரஷ்யா

0
240

சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிலவிற்கு ரஷ்யா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷ்யா ஆகஸ்ட் 11ஆம் திகதியன்று காலி செய்யவுள்ளது.

கடந்த 1959ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு வரை ரஷ்யா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்த நிலையில் இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது.

ரஷ்யாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

கடந்த 1976ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11ஆம் திகதியன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷ்யாவின் முதல் விண்கலம் இதுவாகும்.

ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதியன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23ஆம் திகதியன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முயற்சி வெற்றியடைந்தால் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.