இலங்கையில் பிரபல ரக்பி வீரரான தாஜூடீன் உயிருடன் எரித்து கொல்லப்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி வசீம் தாஜூடீன், நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்திற்கு அருகில் வாகன விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
எனினும் அவரது மரணம் ஒரு படுகொலையாகும் என நீதிமன்றில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், விசேட நிபுணத்துவ மருத்துவர் ஜெஹான் பெரேரா மேலதிக சட்ட வைத்திய அதிகாரி எஸ்.ஜீ.ஏ. ஹெவகே உள்ளிட்டவர்கள் இந்த அறிக்கையை தயாரித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முன்னாள் அதிபர் மைத்திரி இந்த கொலை தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி வெளியிட்ட பரபரப்பு தகவல்
தாஜூடீன் அவரது வாகனத்திலேயே எரியூட்டப்பட்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் காதலியை பின்தொடர்ந்தார் என்ற காரணத்தாலேயே அவர் கொல்லப்பட்டதாக முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டில் அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இந்த வழக்கிற்கு என்ன நேர்ந்தது என்பதே தெரியவில்லை. கொழும்பு மேல் நீதிமன்றில் பாதுகாப்பாக காணப்பட்ட தாஜூடீனின் உடல் பாகங்களும் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.