தேனியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்துச் சென்ற பொலிஸ் வாகனம் விபத்து!

0
66

இந்திய அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூடியூப் சனல்களுக்கும் தொடர்ந்து செவ்வி அளித்து வருகிறார். அவ்வாறு சனல் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வி தற்போது அவருக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூடியூப் சனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், பொலிஸ் அதிகாரிகள், பெண் பொலிசார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாகவும் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற பொலிசார் அவரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர்.

பொலிஸ் வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி 293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் பொலிசார் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.