யாழ் வலி. வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கும் பணி டக்ளஸ் தலைமையில் ஆரம்பம் 

0
162

யாழ்ப்பாணம் – வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்டரீதியாக விடுவிப்பதற்கான அளவீடு பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று (19.06.2023) ஆரம்பமாகியுள்ளது. 

2013 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடைமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளாக சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6,300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டுக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே காணப்படுகின்றமையினால், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இதற்காகக் குறித்த காணி அளவீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 புதிய வர்த்தமானி 

கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தம் காரணமாக இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2013 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடைமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளாக சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6,300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டுக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே காணப்படுகின்ற மையினால், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருக்கின்றது. 

பணிகள் நிறைவுக்கு வரும்

இது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாகக் கலந்துரையாடிய நிலையில் குறித்த 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும் தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற சுமார் 2,900 ஏக்கர் காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் காணி அளவீடுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் இரண்டு மாதங்களில் குறித்த பணிகள் நிறைவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.

அளவீட்டுப் பணிகள் 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் ஜனாதிபதி செயற்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் தீர்மானப்படி இன்று அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், நில அளவைத் திணைக்கள மாகாண பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.