போக்குவரத்து வழக்கு தொடர்பில் கைப்பற்றப்பட்ட ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளை பொலிஸ் அதிகாரி ஒருவரே களவாடி போதைப்பொருள் வியாபாரிக்கு 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ள சம்பவம் ஒன்று மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விதிமீறலுக்காக பிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
மிரிஹான தலைமையகப் பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் கடந்த 8ஆம் திகதி போக்குவரத்து விதிமீறலுக்காக இந்த மோட்டார் சைக்கிளை பொலிஸாரின் பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கின் சான்றுப் பொருளாக மோட்டார் சைக்கிள் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த மோட்டார் சைக்கிளை வழங்கியதாகவும் சந்தேக நபர் கான்ஸ்டபிளின் உதவியுடன் லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சந்தேகநபர் மேற்கண்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மிரிஹான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் 40 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மேற்படி மோட்டார் சைக்கிள் தொடர்பான விசாரணைகளின் போதே மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்ட மிரிஹான தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.