அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தால் தனியார் போராட்டம் வெடிக்கும்: ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை

0
70

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் தனியார் துறையினர் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சம்பள உயர்வு, வெற்றிடங்களுக்கு ஆட்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து பல்துறைசார் அரச தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாட்டின் பொது சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் கொதிநிலையை அடைந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் சூழலில் அரசாங்கத்துக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்களால் பல்வேறு நெருக்கடிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.

அரச ஊழியர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமென்றால் வற் வரியை 18 வீதத்தில் இருந்து 21 வீதமாக உயர்த்த வேண்டுமென நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியுடனான அண்மைய சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில் வற் வரியை உயர்த்தி பொது மக்களுக்கும் தனியார் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரச ஊழியர்கள்ளுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கினால் தனியார் துறையினர் பாரிய போராட்டத்தில் குதிக்க நேரிடும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வற் வரியை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம். பாடசாலை மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க நேர்மையுடனும் நியாயத்துடனும் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோருகிறோம் என்றும் அவர் கூறினார்.