இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைய சீனா உதவ வேண்டும்: மனோ கணேசன் கோரிக்கை

0
36

இலங்கை, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு சீனா உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் துணை அமைச்சர் சன் ஹையனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனா, பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்ஸ் குழுவில் இந்தியா, ரஷ்யா ஆகியவை நல்ல இடத்தில் இருப்பதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து சீன தூதுக்குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சந்தித்திருந்தார்.

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) போன்ற கட்சிகளின் பிரதிநிதிகளையும் சீன குழுவினர் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.