காதலிக்காக வாங்கிய பர்கர் – சாப்பிட்ட நண்பன் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் நடந்த பரபரப்பு சம்பவம்

0
36

பாகிஸ்தானைச் சேர்ந்த டேனியல் என்பவர் தனது காதலியான ஹாஜியாவை தனது வீட்டுக்கு அழைத்ததோடு அவளுக்காக பர்கர் (Burger) ஒன்றையும் ஆர்டர் செய்துள்ளார்.

குறித்த தினத்தில் டேனியலின் நண்பரான அலி கீரியோவும் அவரது சகோதரர் அஹ்மருடன் டேனியல் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்போது டேனியல் தனது காதலிக்காக ஆர்டர் செய்து வைத்திருந்த பர்கரில் கொஞ்சத்தை எடுத்து சாப்பிட்டிருக்கிறார் அலி கீரியோ.

இதனால் ஆத்திரமடைந்த டேனியல் தனது காதலிக்காக வாங்கியதை நீ சாப்பிடுகிறாயா? என அலி கீரியோவிடம் கோபமடைந்துள்ளார்.

சிறிது நேரத்தில் உச்சக்கட்ட கோபத்துக்கு உள்ளான டேனியல், அங்கிருந்த காவலாளியிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கி அலி கீரியோவை சுட்டுள்ளார்.

இதில் படுகாயடைந்த அலி கீரியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இந்த கொலைக்கு டேனியல்தான் காரணம் என அறிக்கை சமர்ப்பித்தனர்.

எது எவ்வாறெனினும் சாதாரண ஒரு பர்கருக்காக விலைமதிக்க முடியாத உயிரைக் கொல்வது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று.

உணர்ச்சிப் பெருக்குகளால் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. எனவே முடியுமானவரையில் நமது கோபத்தை அடக்கியாளத் தெரிந்தால் இவ்வாறான அநியாய உயிர் சேதங்கள் ஏற்படாது.