வைத்தியசாலைகளின் சேவைகளுக்குத் தேவைக்கேற்ப இராணுவத்தினரை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறு பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கு இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனடிப்படையில் வைத்தியசாலைகளின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் சிறு தொழிலாளர் தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசு வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கியதுடன், நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் சுகாதார அமைச்சு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலை நடவடிக்கைகளை இடையூறு இன்றி மேற்கொள்ளும் வகையில் இராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதிகளின் மேற்பார்வையில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹ்மோதர, பேராதனை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை பலாங்கொடை, அஹெலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மீரிகம ஆகிய வைத்தியசாலைகள் நாளாந்தம் இயங்கும் எனவும்
பொதுமக்களுக்கு இடையூறின்றி இராணுவப் படையினர் தங்களின் கடமைகளை செய்வதற்கு களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்ப இதுவரை 500 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அவசரநிலை ஏற்பட்டால் அனுப்புவதற்கு தேவையான படையினரை தயார்படுத்துமாறும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தொழில்முறை நடவடிக்கைகள் காரணமாக எந்த தடையும் இல்லாமல் மக்களுக்கு சேவையை வழங்குவதே பிரதான நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.