அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த யாழ் பெண்: காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!

0
205

கல்கிஸ்ஸையில் உள்ள விடுதியொன்றின் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து தமிழ் யுவதியொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் கூறும் சில கருத்துக்கள் முரண்பாடானதாக இருந்தாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த மரணம் தற்கொலையா? கொலையா? என்பது இன்னும் முடிவெடுப்பதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

குறித்த சம்பவத்தில் பிரித்தானிய வாழ் இலங்கைப் பெண்ணான சின்னையா இலங்கேஸ்வரன் ரொமினா (27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.40 மணியளவில், குறித்த யுவதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த இளம் பெண் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நிலையில் தற்போது குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வசிக்கிறார்.

அவர் இலங்கையில் தங்கியிருந்தது, குடும்பத்தினருக்கு தெரியாது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

மலேசியாவில் ஒரு மாநாடு, ஆராய்ச்சி திட்டத்துக்காக சில மாதங்கள் தங்கியிருக்க வேண்டுமென பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு, கொழும்பு வந்து தனது முகநூல் காதலனுடன் தங்கியிருந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளம் பெண் கொழும்பில் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியை குடும்பத்தினர் முதலில் நம்பவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

ரொமினா, உயர்கல்வி பயின்று வந்தார். முகநூல் ஊடாக வௌள்வத்தையை சேர்ந்த குஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனுடன் காதல் உறவு ஏற்பட்டதாக தற்போது தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

சட்டக்கல்லூரி மாணவரான அந்த இளைஞனும், ரொமினாவும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். காதலனுடன் நேரத்தை செலவிட விரும்பிய ரொமினா கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வந்திருந்தார்.

ரொமினா தமிழ் கத்தோலிக்கர். காதலன் சைவர். காதலன் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, ஞானஸ்நானம் பெற வேண்டும் என ரொமினா வற்புறுத்தியதாகவும், சைவ மதத்தை சேர்ந்த காதலன் சம்மதிக்காததால், இருவருக்கும் இடையே ஆரம்பம் முதலே பிரச்னைகள் இருந்து வந்தன.  

அந்த ஜோடி 3 வாரங்களுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரொமினா மொத்தத் தொகையை ஸ்டெர்லிங் பவுண்ஸ் ஆக செலுத்தினார்.

தனது காதலனுடன் மூன்று வாரங்கள் வாழ்ந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி பிரித்தானியாவுக்கு செல்ல தயாராக இருந்தார். அதற்கு முதல் நாள் முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

காதலியின் படுக்கையில் பல இரத்தக் கறைகள் காணப்பட்டதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் காதலனிடம் விசாரித்த போது, ​​உயிரிழந்த காதலியின் காலில் சிறிய காயம் இருந்ததாக தெரிவித்தார்.

காதலன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யுவதி உயிரிழப்பதற்கு முதல் நாளும் மதத்தின் அடிப்படையில் வாக்குவாதம் செய்ததாக தெரிவித்தார்.

கத்தோலிக்க மதத்திற்கு மாறுமாறு காதலி வற்புறுத்திய போதும் சைவ மதத்தை விட்டு விலக விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், 6 பியர் கான் குடித்துவிட்டு தூங்கிவிட்டதாகவும், பின்னர் எழுந்து பார்த்தபோது காதலியை காணவில்லையென்றும், தேடிப்பார்த்தபோது, அடுக்குமாடி குடியிரப்பின் கீழே அவரது உடல் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

காதலன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். –