நீதிமன்ற உத்தரவை மீறி அரசுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

0
188

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராகப் கொழும்பில் இன்று போராட்டமொன்று கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதார மீட்சிக்கான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஊழியர் சேமலாப வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர்களின் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

என்றாலும் தடை உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு திரண்டுள்ளனர்.