திருகோணமலை – பெரியகுளத்தில் விகாரை கட்ட அனுமதி

0
215

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமாணப் பணிகளை மீள தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப்பணிகளுக்கு கடந்த ஜீலை 9 ஆம் திகதி நகர மற்றும் கடவத் பிரதேச செயலாளர் பி.தினேஸ்வரன் தற்காலிகமாக தடை விதித்திருந்தார்.

இந்நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் விகாரையின் கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாவட்ட செயலாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் விகாராதிபதி தலைமையிலான மதத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அண்மையில் பாராளுமன்றில் துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் எழுப்பியிருந்த கேள்வி ஒன்றின்போது விகாரை அமைக்கும் பணியை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்பதுடன் இது ஆளுநரின் தனிப்பட்ட தீர்மானமே என பதிலளித்திருந்தார்.