அம்பாறையில் எரிபொருள் தட்டுப்பாடு; மக்கள் மீண்டும் வரிசையில் (Photos)

0
137

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை நேற்றைய தினம் (31.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்,  இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகம்

அம்பாறை மாவட்டம் – கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்தறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெட்ரோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு நேற்றைய தினம் (31.05.2023) முதல் இன்றைய தினம் (01. 06.2023) காலை வரை எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்துள்ளது.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Gallery
Gallery