இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் தற்போது திருமணம் நடத்துவது என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலான விடயம்தான். ஏனெனில் காலங்கள் மாறமாற வரதட்சணையும் அதற்கு ஏற்றால் போல மாறிக்கொண்டிருப்பதுதான்.
வரதட்சணையை ஏற்க மறுப்பு
அந்தவகையில் இந்தியாவில் இராணுவ வீரர் ஒருவர் திருமணத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட 1150,000 இலட்சம் ரூபாய் வரதட்சணையை ஏற்க மறுத்து ஒரு ரூபாயையும், ஒரு தேங்காயையும் மட்டுமே பெற்றுக் கொண்ட சம்பவம் பலரையும் வியக்கவைத்துள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் ஹுடில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் சிங் ஷெகாவத். இவர் தனது மகளை இராணுவ வீரர் அமர்சிங் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் பெண்ணின் தந்தை பிரேம் சிங் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக ரூ. 1150,000 இலட்சத்தை ஒரு தட்டில் வைத்து மணமகனிடம் கொடுத்தார்.
அப்போது மணமகன் அமர்சிங், “நான் வரதட்சணை வாங்கமாட்டேன்” என்று கூறி அதிலிருந்து ஒரு ரூபாயையும் ஒரு தேங்காயையும் மட்டும் எடுத்துக் கொண்டார். அத்துடன் மணப்பெண்ணின் தந்தை கொடுத்த வரதட்சணை பணத்தை மணமகனின் தந்தை வாங்கி மீண்டும் மணப்பெண்ணின் தந்தையிடமே கொடுத்தார்.
இந்நிலையில் மாமனார் வழங்கிய வரதட்சணையை மணமகன் திரும்பக் கொடுத்த மாப்பிள்ளையை பலரும் பாராட்டி வருகின்றனர். அமர்சிங் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக இராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.