வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகங்களிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ்மா அதிபர், விசாரணை அதிகாரிகளுக்கு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணம் குறித்த விசாரணை
சாப்டர் மரணம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகளை கடந்த வாரம் அழைத்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண முக்கிய குற்றவாளி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கசியவிடப்படும் தகவல்கள் தொடர்பில் எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வர்த்தகர் கொலை தொடர்பில் இதுவரை விசாரணையில் திருப்புமுனை எதுவும் ஏற்படாத போதிலும் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என்பது போல தகவல்கள் கசியவிடப்படுகின்றன என பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலசாத்தியக்கூறுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன தற்கொலையும் அதில் ஒன்று ஆனால் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை என விசாரணை அறிந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கைகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கேபிள்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையால் இது தற்கொலை என உறுதி செய்ய முடியாது கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை எந்த சாத்தியக்கூறுகள், தடயவியல் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்களை எதிர்பார்த்திருக்கின்றோம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.