கொழும்பில் கடத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த பிரபல தமிழர் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சுமார் 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு சம்பவம் தொடர்பில் பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் கிடைத்த சாட்சியங்கள்
தினேஸ் ஷாப்டரின் காரில் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸிடமும் சிஐடி வாக்குமூலம் பெற்றுள்ளது.
அந்த விசாரணைகள் தொடர்பில் பொரளை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல தமிழர் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.