பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகால ஆட்சியில், அவர் ஒரு போதும் யாருக்கும் தலைவணங்கியதில்லை. அவர் அப்படி தலைவணங்கவும் கூடாது. காரணம் மகாராணியார் தலைவணங்குவது மரபை மீறும் செயலாகும்.
அப்படிப்பட்ட நிலையில், யாருக்கும் தலைவணங்காத பிரித்தானிய மகாராணியார் ஒரே ஒருவருக்காக தலைவணங்கினார். அந்த ஒருவர் இளவரசி டயானா!
ஆம், இளவரசி டயானா கார் விபத்தில் கொல்லப்பட்டபோது அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பக்கிங்காம் மாளிகையின் முன் மகாராணியாரும் ராஜகுடும்பத்தினரும் மாளிகையின் வாசலில் நின்றிருந்தார்கள்.
டயானாவின் உடல் அடங்கிய சவப்பெட்டி தன்னைக் கடக்கும்போது மரபை மீறி டயானாவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தலைவணங்கினார் மகாராணியார்.
வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் மகாராணியாரின் அருகில் நிற்கும் ராஜகுடும்பத்தினர் அனைவரும் நிமிர்ந்து நிற்க மகாராணியார் மட்டும் தலைகுனிந்து மரியாதை செலுத்துவதைக் காணலாம்.
மகாராணியாரைப் பொருத்தவரை அவர் ஒரு ராஜதந்திரி என்றே கூறலாம். காரணம் டயானா உயிரிழக்கும்போது அவர் இளவரசி அல்ல. ஆனாலும், மக்கள் அவரை மக்களின் இளவரசி என்றே அழைத்தார்கள்.
இளவரசர் சார்லஸ் ஏற்கனவே டயானாவை விவாகரத்தும் செய்திருந்தார். ஆகவே, டயானாவுக்கு ராஜமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
ஆனாலும், டயானாவுக்கு ராஜமரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்படிச் செய்ததால் அது ராஜகுடும்பத்துக்கு நன்மையை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம்.
மக்களின் இளவரசியாக மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த டயானாவுக்கு மரியாதை செலுத்தி டயானாவைப் போலவே மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக்கொண்டார் மகாராணியார் எனலாம்.