யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை முழுமையாக பறிபோகவுள்ளது.
குறித்த காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலம்
வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போதும் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது.
இதில் இராணுவத்துக்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு 2022.09.23 காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகாவினால் தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் வலிகாமம் வடக்கில் மீனவர்களின் நிலம் 212 ஏக்கரும், பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 612 ஏக்கரும் விடுவிக்கப்படும் என நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை கூண்டோடு இராணுவ மயமாக்களிற்கு முயற்சிக்கப்படுகின்றது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதேவேளை வலிகாமம் வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள நிலங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு காய்நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.