மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கா.பொ.த. உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்றுவருகின்றார்.
இந்த நிலையில் கடந்த யூலை மாதம் 21 ஆம் திகதி பாடசாலை அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து அந்த மாணவி மீது பாலியால் சேஷ்டை புரிய எத்தனித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த அதிபர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி சம்பவதினமான 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு. பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அதிபர் தன்மீது சிஜடி எனதெரிவித்து 4 பேர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர்களை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் வெளியாகிய வீடியோவை ஆதாரமாக வழங்கி தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அதிபர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.