இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதியவர் ஒருவர் புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். அதை பெற்றுக்கொள்ள காரில் இருந்து அவர் இறங்கிச் செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் தேர்தல்
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குஜராத் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மும்முனை போட்டி நிலவும் குஜராத் சட்ட மன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கிறார்.
வரவேற்பு
கடந்த 9 ஆம் தேதி குஜராத் மாநிலத்துக்கு சென்ற மோடி அங்கு நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜாம்நகர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்கு மோடி சென்றார். அப்போது சாலையில் இருபக்கத்திலும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கூடி ஆராவாரம் செய்தனர்.
வீடியோ
சிலர் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பயணத்தின் போது , காரை நிறுத்திய மோடி திடீரென இறங்கி சாலையில் நடந்து சென்றார். முதியவர் ஒருவர் கையில் வைத்திருந்த புகைப்பட பிரேமை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்ட மோடி அதில் கையெழுத்து போட்டு அவரிடமே ஒப்படைத்தார். அந்த பிரேமில் மோடி தனது தாயாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் இருந்தது. இகனையடுத்து அந்த புகைப்படத்தை எடுத்து வந்த முதியவர் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
இதனை தொடர்ந்து, இன்னொரு இளைஞரும் மோடியின் முகத்தை வரைந்து அவருக்கு பரிசாக அளித்தார். அதனை அன்போடு வாங்கிக்கொண்ட பிரதமர் மோடி அவருடன் கைகுலுக்கினார். இந்த வீடியோவை பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.