இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கட்டார் நாட்டின் எரிசக்தி விவகார அமைச்சரும் கட்டார் எரிசக்தி துறையின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான Saad Sherida Al-Kaabiயை இன்று சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் கட்டார் நாட்டிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையிலான பிரதிநிதிகள் இன்று கட்டார் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பது என அமைச்சரவை தீர்மானித்தது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம், உணவு விநியோகம் மற்றும் விவசாயம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அத்தியாவசிய சேவைகளாக கருதப்படும் எனவும் பந்துல குணவர்தன கூறியிருந்தார்.
மேல் மாகாணம் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகள் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடப்படும். வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தாம் விரும்பியபடி பாடசாலைகளை திறந்து நடத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.