கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 28ஆம் திகதி முதல் ஆரம்பம்

0
400

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை சிறிலங்காவிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதி (வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் கிராமத்துடன் கலந்துரையாடல்´ நிகழ்ச்சித் திட்டத்தின் 7வது வேலைத்திட்டத்தில் நேற்று பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த தகவலை கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறிலங்காவுக்கு வரும் என்றும் கூறினார்.

300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகமாக இந்தியாவிடம் இருந்து குறித்த 6 இலட்சம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து கொவிட் தடுப்பூசிகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.