“நளினியை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

0
946
Nalini Release

Nalini Release

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள நளினியை, முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக அறிவிக்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ல் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் சட்டத்தின் கீழ், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சசிதரன், ஆர்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வு முன் ஏப்ரல் 23ல் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அரசியல் சாசனம் 161ன்படி கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் , ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்தார்.இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பானதுஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளியானநளினியை விடுக்க தமிழ அரசுக்குஉத்தரவிடமுடியாது என்றும் நீதிபதிகள் இன்று தீர்பளித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதே கோரிக்கையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.