கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வு: லண்டனில் நிரந்தரமாக குடியேறும் கோலி

0
170

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் நிரந்தரமாக லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்ற நிலையில், அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தச் செய்தி அவரது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோலி இந்த முடிவை இப்போது எடுக்கவில்லை, கடந்த ஆறு மாதங்கள் முன்னதாகவே எடுத்துவிட்டார் என்ற தகவலை அவரது சக வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் இப்போது இந்த ஜோடி நிரந்தரமாக லண்டனில் குடியேற திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? சர்வதேச டி20 கோப்பையை வென்ற பின்னர் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உலகமே வியக்கும் வண்ணம் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதன்பின்னர்தான் இந்த முடிவை இந்த ஜோடி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஓய்வுக்குப் பின்னர் லண்டன் வாழ்க்கையை நிரந்தரமாக்கிக் கொள்ளலாமா? என்பது பற்றி இருவரும் விவாதித்து வருவதாக பேச்சுகள் இணையத்தில் அடிப்பட ஆரம்பித்துள்ளன.

இந்தச் சந்தேகத்திற்கு முதல் காரணம், இந்த ஜோடி அதிக நாட்களை லண்டனில் தான் செலவிட்டு வருகிறது. வேறு நாடுகளைவிட லண்டன் இவர்களின் விருப்பப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

உணவகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம்

கடந்த சில மாதங்கள் முன்னர் விராட் கோலியும் அனுஷ்காவும் லண்டனை சுற்றிச் சுற்றி வலம் வந்தனர். நிறைய புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

கடந்த டிசம்பரில் கோலி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து சின்ன ஓய்வை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்கு பறந்தார். அப்போதுதான் லண்டன் உணவகம் ஒன்றின் முன்பாக அவரும் அனுஷ்காவும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பிப்ரவரியில், கோலி மீண்டும் தனது மகள் வாமிகாவுடன் லண்டனுக்குப் போனார். இந்த ஜோடி தங்களுக்கு மகன் பிறந்ததாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு லண்டன் உணவகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

மீண்டும் அனுஷ்கா ஜூன் தொடக்கத்தில்தான் மும்பை திரும்பினார். இவரும் கோலியும் டி20 உலகக் கோப்பைக்காக அடுத்து நியூயார்க் போய்விட்டனர். விராட், அனுஷ்கா தம்பதி கடந்த பிப்ரவரி 20 அன்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர்.

அதாவது மகன் பிறந்த 5 நாட்களுக்குப் பிறகு இந்தச் செய்தியை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவுக்கு வெளியே இந்தப் பிரசவம் நடத்தாக கூறப்பட்டது. அதை வைத்து நெட்டிசன்கள் பல திரைக்கதைகளை தாங்களாகவே எழுதினர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக மகன் அகாய் இங்கிலாந்தில் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தவறவிட்ட கோலி, தனது இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக இங்கிலாந்து சென்றதாக தகவல் வெளியானது.

35 வயதான அவர் தனது மகன் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு லண்டனில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதனால் வதந்திகள் இன்னும் வலுப்பெற்றன.

இதனடிப்படையில்தான் இப்போது விராட், அனுஷ்கா தம்பதி லண்டனில் செட்டில் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “விராட் தன் ஓய்வு காலத்தை நெருங்கி வருகிறார்.

ஆகவே, அவர் பெரும்பாலும் இங்கிலாந்தில்தான் இருப்பார். அவர் ஐரோப்பாவில் தங்குவதை விரும்புவதாக அவர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால் அங்கே உள்ள பெரும்பாலானவர்களால் இவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

அது இந்த ஜோடிக்கு ஒரு சாதாரண வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும். விவிஐபி என்ற பாரம் இல்லாமல் சகஜமாக வாழலாம் என எண்ணுகின்றனர்.

வெளிநாட்டில் உள்ளபோது தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காததை பற்றி கோலியும் பேசியுள்ளார். இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் செலவிட்ட நேரத்தில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தனது மகள் வாமிகாவுடன் சேர்ந்து பல இடங்களில் ஊர் சுற்றியதாகவும் அவர் கூறியிருந்தார்.

“நாங்கள் இந்தியாவில் இல்லை. இரண்டு மாதங்கள் லண்டனில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தோம். எனக்கும் என் குடும்பத்திற்கும் அப்படித்தான் தோன்றியது. அது ஒரு ஆச்சரியமான அனுபவம்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. சாலையில் போகும் எங்களை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இது ஒரு ஆச்சரியம்.” என்று கோலி கூறியிருந்தார்.

கோலியும் அனுஷ்காவும் இங்கிலாந்தில் தொழில் செய்து வருகின்றனர். மேஜிக் லாம்ப் நிறுவனத்தில் இந்த இருவரும் டைரக்டர்களாக உள்ளனர்.

இது ஒரு கன்சல்டன்சி கம்பெனி. இதை இங்கிலாந்து அரசு ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த கம்பெனிக்கு மொத்தம் 3 இயக்குநர்கள். அதில் அனுஷ்காவும் கோலியும் இரண்டு இயக்குநர்கள் ஆவர்.