மகளிர் T20 உலகக் கிண்ணம்: இலங்கை விளையாட தகுதி

0
42

மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று (05) இடம்பெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியின் அரையிறுப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டிருந்தது.

இதன்படி இறுதிப் போட்டியில், ஸ்காட்லாந்து மகளிர் அணியுடன் இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் T 20 உலகக் கிண்ண தொடரில் விளையாட இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக விஷ்மி குணரத்னே 45 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி இலங்கை மகளிர் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பந்து வீச்சில் சாமரி அத்தபத்து 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளைக் வீழ்த்தியிருந்தார்.