ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்; பேராயரின் குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய மறுப்பு

0
34

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்றாக மறுத்துள்ளார்.

ஒரு அறிக்கையில், 250க்கும் மேற்பட்டோரின் உயிரைக் கொன்ற, மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்திய படுகொலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் பேராயர் சுட்டிக்காட்டிய நான்கு குற்றச்சாட்டுக்களையே கோட்டாபய மறுத்துள்ளார்.

முதலாவது குற்றச்சாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இவ்வாறு பதிலளித்துள்ளார். ‘ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நான் பேராயருடன் தொலைபேசியில் பேசவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது. ஏனெனில் அது மக்களை கைது செய்யும் மற்றும் என்னுடன் இணைந்த அமைப்புக்களை தடை செய்யும்’.

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்,

‘ஜனாதிபதி விசாரணைக் குழு அறிக்கையின் (Presidential Commission of Inquiry – PCoI) முதல் நகலை பேராயரிடம் ஒப்படைக்க தாமதிக்கவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 2021 பெப்ரவரி 1ஆம் திகதி என்னிடம் கையளிக்கப்பட்டது. அதனை நான் ஆய்வு செய்தபின் 2021 பெப்ரவரி 23 ஆம் திகதியன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் 2021 மார்ச் 01ஆம் திகதி வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர்களால் பேராயர் மற்றும் கத்தோலிக்க ஆயர்களுக்கு வழங்கப்பட்டது’.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துமாறு 6 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவிடம் தாம் கேட்கவில்லையென கோட்டாபய தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யவில்லையென்றும் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் மூத்த அதிகாரி ஒருவரை சிறையில் அடைக்கவில்லை என்றும் கோட்டாபய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கர்தினால் ரஞ்சித் தொடர்ந்து தன்னை விமர்சித்து வருவதாகவும் தாக்குதலைத் தடுக்கத் தவறியது அப்போதைய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியின் தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டுத் தன்னை நிராபராதியாக்கியாக்க முற்படுகின்றார் கோட்டாபய.