ஈரான் – இஸ்ரேல் மோதல்: இலங்கையை எவ்வாறு பாதிக்கிறது?

0
35

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் தொடருமானால், ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளப்படும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருள் வழங்குநராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் எரிபொருள் ஏற்றுமதியில் தொண்ணூறு வீதம் சீனாவுக்கு செல்வதாகவும் இதற்கு மேலதிகமாக ஈரான், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்வதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் ஈரானில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இதன்படி இலங்கைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் 61 ஆவது இடத்தை வகிக்கின்றது. ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 19 ஆம் திகதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சுமார் 300 ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தியது.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் இந்த மோதல்கள் உலகப்போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.