தையிட்டி விகாரை நிலத்தில் தமிழர்களுக்கு உரிமை இல்லை: சட்டவிரோத விகாரைக்கு சட்டப்பூர்வ அனுமதி கோரும் இராணுவம்

0
78

யாழ்ப்பாணம் தையிட்டியில் சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதேவேளை, தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

தையிட்டியில் தமிழருக்கு உரிமைகிடையாது

சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில், 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த சிங்கள குடும்பங்களுக்கு அது சொந்தமானது எனவும், இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோருகின்றனர்.

இருப்பினும் விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ, தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது. அது முழுமையாக விகாரைக்குரியது. அங்கே நிலம் இழக்கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன்,

“தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார்.

அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

தமிழரின் நிலத்தை அபகரித்தே விகாரை கட்டப்பட்டது

இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப்பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார்.

அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது? 1956 ஆம் ஆண்டு தையிட்டியில் 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே விகாரைக்குரியது.

இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது.

அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்ட மீறல். அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில் சர்ச்சை

அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது என இராணுவ அதிகாரி, பதிலளித்தபோது அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது.

இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வேள்வி எழுப்பினார். இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.