தூதரக உறவு விரிசலால் கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி..!

0
103

கனடா இந்தியா தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலால், கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் ஒருவரின் மரணத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கனடா இந்தியா தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசலால், கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலக தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கனடாவில் குடியிருப்பு அனுமதி கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 2023 டிசம்பரில் 62 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவில் குறைந்துள்ளது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 16,796 இந்தியர்கள் கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், 2023 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 6,329ஆக குறைந்துள்ளது.

அதேபோல, 2022ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்த இந்தியர்களின் எண்ணிக்கை 35,735ஆக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்த இந்தியர்களின் எண்ணிக்கை 19,579ஆக குறைந்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.