தமிழில் அஜித்துடன் வில்லன், விஜய்யுடன் பத்ரி படங்களில் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளவர் புபேந்தர் சிங். ஹிந்தி டிவி தொடர்கள் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள புபேந்தருக்கு உத்திரபிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் பண்ணை தோட்டம் உள்ளது.
இதன் அருகே குர்தீப் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் புபேந்தர் தன் தோட்டத்தை சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்ட முயன்றார். இது தொடர்பாக புபேந்தர் மற்றும் குர்தீப் சிங் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த புபேந்தர் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து குர்தீப் சிங் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார். மேலும் புபேந்தர் தனது துப்பாக்கியால் சுட்டதில் குர்தீப்பின் மகன் கோவிந்த் (22) பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் குர்தீப் அவரது மற்றொரு மகன் அம்ரிக், மனைவி பீரா பாய் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக புபேந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜியான் சிங், ஜீவன் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய நால்வரை காவல்துறை கைது செய்துள்ளது.