பிரபல சிங்கள நடிகர் ஜாக்சன் அந்தனியின் மறைவை இலங்கை கலைத்துறைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாக தாம் கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல சிங்கள நடிகர் ஜாக்சன் அண்டனி நேற்றைய தினம் (10) காலமானார்.
நாட்டையே கண் கலங்க வைத்த இவரது மறைவுக்கு இலங்கை கலைஞர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று தங்கள் அனுதாபங்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தனது அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார்.
மேலும் குறித்த செய்தியில்,
”இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் சத்தியத்துக்குட்பட்டவர்கள். என்றோ ஒரு நாள் நாம் இவ்வுலகை விட்டு செல்ல வேண்டும்.
கடந்த சில தினங்களாகவே நடிகர் ஜாக்சன் அண்டனியின் படைப்புக்கள் தொடர்பில் அநேகமானவர்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர்.
எனினும் அதில் விடுபட்ட ஒரு காரணத்தை பற்றி விசேட கவனத்தை செலுத்த நான் விரும்புகின்றேன். அது அவர் ஒரு சிறுகதையாளராக வகித்த பங்கு.
”கந்த உட கெதர” என்பது ஜாக்சன் எழுதிய முதல் சிறுகதையாகும். அதனுடைய இரண்டாம் பகுதியை எழுத அவர் தயாராக இருந்தமை தொடர்பிலும் நான் அறிவேன்.
இருப்பினும் அதனை நிறைவு செய்யும் முன்னர் அவருடைய ஆயுட்காலம் நிறைவடைந்து விட்டது. அது மிகவும் வருந்ததக்க ஒரு விடயமாகும்.
அவருடைய மறைவு தொடர்பில் நானும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக மற்றுமொரு விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஜாக்சனுடைய வாழ்க்கையில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ” என தெரிவித்து பைபிள் வசனத்துடன் தனது அனுதாப செய்தியை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மறைந்த பிரபல சிங்கள நடிகர் ஜாக்சன் அண்டனியின் இறுதிக்கிரியை நாளை (12) இடம்பெறவுள்ளது. இராகமை peter and paul தேவாலயத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி