கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன்; அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர்

0
207

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து நேற்று இரவு வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை எத்தியோப்பியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் 26 வயதான கென்ய மோட்டார் வாகன வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் விமானம்

எத்தியோப்பியாவின் அடிஸ்அபாபாவிலிருந்து கட்டார் நாட்டின் தோஹாவுக்கு வந்த அவர் அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர் | Katunayake International Airport Gold Scam

சந்தேகநபர் கொண்டு வந்த கைப் பையில் “குக்கீஸ்” பிஸ்கட் அடங்கிய 03 டின்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோ கிராம் எடையுள்ள 180 கொக்கெய்ன் வில்லைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வழியாக செல்லவிருந்த போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள்

இந்த கென்யா நாட்டவர் முதல் தடவையாக இலங்கைக்கு வந்திருந்ததாகவும், இவர் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு சர்வதேச புலனாய்வுப் பிரிவு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், கொக்கேய்ன் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.