2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை 238 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ஓட்டங்களுக்கும், இமாம் உல் ஹக் 5 ஓட்டங்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 149 ஓட்டங்களை குவித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களை குவித்தது.
இதனையடுத்து 343 ஓட்டங்கள் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணியின் துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 என்ற சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார். துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணிக்கு சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்கள் விழுவதை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது.
இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ஓட்டங்களை குவித்து தங்களது விக்கெட்டை இழந்தது.
இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிக ஓட்டங்களை அடிக்காமல் அவுட் ஆக, நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.