கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் மரணத்தின் எல்லை வரை சென்று தெய்வாதீனமாக உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் தனது காரை செலுத்தி சென்ற வேளையில் முன்னாள் பயணம் செய்த பாரிய ட்ரக் வண்டி ஒன்றிலிருந்து இரும்பு கம்பம் ஒன்று வீசி எறியப்பட்டு குறித்த பெண் பயணம் செய்த காரின் முன் பக்க கண்ணாடியை ( windshield) துளைத்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் சம்பவம் பற்றி விபரித்துள்ளார்.
என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திப்பதற்கு நேரம் இருக்கவில்லை என சூசன் மிலன் என்ற குறித்த பெண் தெரிவிக்கிறார்.
குறித்த பெண் வடக்கு வான்கூவாரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இரும்பு கம்பம் முன்பக்க கண்ணாடியை துளைத்துக்கொண்டு சாரதி இருக்கையின் ஊடாக வாகனத்திற்குள் ஊடுருவியுள்ளது.
மிலனின் தலைப்பகுதிக்கும் இந்த இரும்பு கம்பத்தின் ஒரு சில சென்டிமீட்டர் இடைவெளியே காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கம்பம் தலையில் பட்டிருந்தால் தலை துளைத்துக் கொண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் தெய்வாதீனமாக அதிர்ஷ்டவசமாக குறித்த பெண் எவ்வித உயிர் ஆபத்தும் இன்றி இந்த விபத்திலிருந்து மீண்டுள்ளார்.
கண்ணாடியின் துகள்கள் உடலில் பட்டு அதனால் ஒரு சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருந்த அவரது மகனுக்கு எவ்வித காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும், நோயாளர் காவு வண்டியூடாக மிலன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.