பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் (Liz Truss) தலைமையிலான மந்திரி சபையில் அவரது போட்டி வேட்பாளரான ரிஷி சுனாக் (Rishi Sunak) மற்றும் ஆதரவாளர்களுக்கு இடமில்லை.
நேற்றையதினம் (07-09-2022) லண்டன் நகரில் உள்ள எண் 10, டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரி சபையின் முதல் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பல அறிவிப்புகளை டிரஸ் வெளியிட்டுள்ளார். அவரது மந்திரி சபையில் முக்கிய பதவிகளில் நாடாளுமன்றத்தின் பன்முக கலாசார, பாரம்பரிய தன்மை கொண்ட சிறுபான்மையினர் அதிக அளவில் இடம் பிடித்து உள்ளனர்.
இதன்படி, உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவளியான சுவெல்லா பிரேவர்மென் இடம் பெற்றுள்ளார்.
இவரது தாயார் உமா தமிழ்நாட்டை சேர்ந்தவர். இதேபோன்று இந்திய வம்சாவளியான இந்தியாவின் ஆக்ரா நகரில் பிறந்தவரான அலோக் சர்மாவும் இடம் பிடித்துள்ளார்.
அவர் சி.ஓ.பி.26 எனப்படும் ஐ.நா.வுக்கான பருவகால மாற்றத்தின் தலைவருக்கான பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.
இதற்கு முன்பும் அவர் இந்த பதவியை வகித்து வந்துள்ளார். சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்களுக்கான உள்துறை மந்திரியாக, இலங்கை மற்றும் இந்திய பாரம்பரியம் கொண்ட லண்டனில் பிறந்தவரான ரணில் ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
லிஸ் டிரஸ் முன்பு பதவி வகித்த வெளியுறவு மந்திரி பதவியானது சியர்ரா லியோன் மற்றும் வெள்ளையின பாரம்பரியம் கலந்த ஜேம்ஸ் கிளவெர்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கருவூல மந்திரியாக முதன்முறையாக கருப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மந்திரி சபையில் முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனாக்கிற்கு இடமில்லை. பிரதமர் வேட்பாளர் போட்டியில் சுனாக்கிற்கு ஆதரவு தெரிவித்தவர்களான பலருக்கும் பதவி கிடைக்கவில்லை.
இதன்படி, முன்னாள் நீதி மந்திரி டோமினிக் ராப், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்கிளே ஆகியோர் பதவி கிடைக்காத குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.