கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை (Anjali Appadurai) போட்டியிடவுள்ளார். இவர் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
அவருக்கு 6 வயது இருக்கும் போது பெற்றோர் கனடாவில் குடியேறினர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் குக்குவிட்லாம் நகரில் அவரது குடும்பம் வசிக்கிறது.
சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி அப்பதுரை அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஹார்பர் நகரில் செயல்படும் College of the Atlantic கல்லூரியில் சர்வதேச அரசியல், பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார்.
சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட அவர் ஐ.நா. சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அஞ்சலி அப்பாதுரை கூறியிருப்பதாவது, நான் கனடாவில் குடியேறியவள். இந்த மண்ணை நேசிக்கிறேன். இது எனது தாய் வீடு. மனிதர்கள் எல்லோரும் சரிசமம் என்று கருதுகிறேன். மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுகிறேன்.
மனித உரிமைகள், சுற்றுச்சூழலை காக்க போராடி வருகிறேன். ஐ.நா. சபை உட்பட பல்வேறு சபைகளில் சுற்றுச்சூழலுக்காக குரல் எழுப்பி இருக்கிறேன். பருவநிலை மாறுபாட்டை தடுப்பது தொடர்பாக ஆட்சியாளர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை.
கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பருவநிலை மாறுபாடு காரணமாக அடுத்தடுத்து பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டனர். வயல்கள் தண்ணீரில் மூழ்கின. பெரும் இழப்பு ஏற்பட்டது.
அடுத்ததாக வெப்ப அலை காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனினும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுவரை போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் கனடாவின் சுற்றுச்சூழலை சீர்கெடுக்கின்றன.
அந்த நிறுவனங்களால் நதிகள் பாழாகின்றன. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி வருகிறது. முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் பருவநிலை மாறுபாட்டை தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
இதன் காரணமாகவே பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எங்கள் கட்சியில் உறுப்பினராகி எனக்காக வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல், அரசியல் மட்டுமன்றி இசை, சல்சா நடனத்திலும் அஞ்சலி அப்பாதுரைக்கு ஆர்வம் அதிகம். அவர் பல்வேறு இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.