பெலாரஸ், ரஷ்யாவின் நடவடிக்கையால் போர் தாக்குதலுக்குள் உள் இழுக்கப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் நான்கு மாதங்களை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் மில்லியன் கணக்கான உக்ரைனியர்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த நான்கு மாத போர் தாக்குதலில் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ்ஸில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முதல்முறையாக உக்ரைனில் வான் தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில், பெலாரஸ், ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்குள் உள் இழுக்கப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பெலாரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ரஷ்யர்களால் பெலாரஸ் நாடும் உக்ரைன் போர் நடவடிக்கைக்குள் உள் இழுக்கப்படுவதாகவும் பெலாரஸ் மக்களுக்குரிய அனைத்து விஷயங்களை ரஷ்யா ஏற்கனவே தீர்மானித்து விட்டதாகவும் கூறிய அவர், உங்களுடைய உயிர் ரஷ்யர்களுக்கு முக்கியமானது இல்லை என பெலாரஸ் மக்களை எச்சரித்துள்ளார்.
அதேசமயம் பெலாரஸ் மக்கள் நிச்சயமாக உக்ரைனை ஆதரிக்கிறார்கள். போரை அல்ல. இந்த காரணத்தால் தான் ரஷ்ய தலைவர்கள் உங்களை இந்த போர் நடவடிக்கைக்குள் உள்ளிழுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை தாக்குதல் எந்த திசையில் இருந்து வந்தாலும் எந்த ஆயுதங்களை கொண்டு தாக்கினாலும் உக்ரைன் அவற்றை எதிர் கொண்டு நிச்சயமாக வெற்றிப் பெறும் என ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.