உக்ரைன் வீரா்கள் சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள்; ரஷ்யா எச்சரிக்கை!

0
445

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள வீரா்கள் சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்க்வா போா்க் கப்பலை உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழித்ததைத் தொடா்ந்து, உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

கீவ் நகரில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா கடந்த சனிக்கிழமை கூறியது.

இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய படையினா் கிட்டத்தட்ட முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மிகப்பெரிய இரும்பு ஆலை ஒன்றில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரா்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய படையினரை எதிா்த்து சண்டையில் ஈடுபட்டு வரும் அவா்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு உடனடியாக சரணடைய வேண்டுமென ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகோா் கொனஷென்கோ(Iko Konashenko) கூறுகையில், உக்ரைன் படையினா் சரணடைவதற்கு அந்நாட்டு ராணுவத் தலைமை தடை விதித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உக்ரைன் படையினருடன் சோ்த்து வெளிநாடுகளைச் சோ்ந்த கூலிப் படையினா் 400 பேரும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா். அனைவரும் உடனடியாக சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என்றாா்.

இந்நிலையில் மரியுபோலை கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் உள்ள உக்ரைன் வீரா்களை பலமிழக்கச் செய்யும் வாய்ப்பு ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது.

தலைநகரை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியை நோக்கி ரஷ்யா தனது போா்த் திட்டத்தை மாற்றிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.