தமிழக சட்டசபை பிப்ரவரி 2 ஆம் தேதி கூடுகிறது

0
365

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் மாதம் 23-ஆம் தேதியுடன் அவசரமாக முடித்துக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, செப்டம்பர் 14-ஆம் தேதி கூடிய சட்டசபை கூட்டம், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 3 நாட்கள் நடந்தது. அத்துடன் கடந்த ஆண்டு சட்டசபை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 2-ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசு திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். மேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கும்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சட்டசபை கூடுவதால், இந்தக் கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய சட்டசபை கூட்டத்தின்போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும், சட்டசபை பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, அதாவது இம்மாதம் இறுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது.