யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்

0
2417
Teacher commits suicide Jaffna cruelty school principal

(Teacher commits suicide Jaffna cruelty school principal)
யாழ்ப்பாணத்தில் அதிபர் ஒருவரின் தொடர்ச்சியான தொந்தரவினால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியைக்குத் தொடர்ச்சியான தொந்தரவு கொடுத்து அவரது தற்கொலைக்குக் காரணமாக அதிபர் ஒருவர் இருந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அதிபரை குற்றவாளியாக இனங்கண்டு கைதுசெய்து தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வசிப்பிடாகவும் கொண்ட தமிழ் பாட ஆசிரியரான 40 வயதுடைய ஜெயசீலன் கவிதா என்பவரே கடந்த திங்கட்கிழமை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஆசிரியை கடமையாற்றிய போது, அந்தப் பாடசாலையின் அதிபர் குறித்த ஆசிரியையை பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக பல நெருக்கடிகளைக் கொடுத்துவந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆசிரியை குறித்த பாடசாலையில் இருந்து கடந்த வாரம் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.

எனினும், இந்த அதிபரால் ஆசிரியைக்குரிய ஆவணங்களை வழங்க மறுத்ததோடு, இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலைக்கு வந்து மாலை நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியையால் வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த அதிபர் குறித்து முறையிட்டதற்காக வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த ஆசிரியை கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய மற்றுமொரு ஆசிரியை ஒருவரும் குறித்த மனிதத்தன்மையற்ற அதிபரால் பாதிக்கப்பட்டு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஆசிரியையின் உயிரைப் பறித்த அதிபரைக் காப்பாற்றுவதற்காக மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்துகின்ற போலியான விசாரணைகளை நிறுத்துமாறும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வடமாகாணக் கல்வி அமைச்சு நேரடியாகத் தலையிட்டு நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Teacher commits suicide Jaffna cruelty school principal