இரனைதீவு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
607
tamilnews iranaitiv people human rights commission complain

(tamilnews iranaitiv people human rights commission complain)

இரணை தீவில் மீள்குடியமர்வதற்கும் வாழ்வாதாரத் தொழிலாளான கடற்றொழிலை முன்னெடுப்பதற்கும் தமக்குள்ள அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு அந்த தீவின் பூர்வீக மக்கள் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (2) முறைப்பாடு செய்யப்பட்டது.

இரணை தீவு மக்கள் போர் காலப்பகுதியான 1992 ஆம் ஆண்டு கடற்படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி இரணை மாதா நகரில் வசித்து வருகின்றனர்.

தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை முழுமையாக முன்னெடுக்க முடியாது அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர்.

இரணை தீவிலுள்ள தமது பூர்வீக காணிகளில் மீள்குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த மக்கள் கடந்த ஒரு வாரமாக இரணை தீவில் தங்கியிருந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அவர்கள் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இன்று (2) புதன்கிழமை அடிப்படை உரிமை மீறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

“1992 ஆம் ஆண்டு எமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேறி கிளிநொச்சி இரணை மாதா நகரில் வாழ்ந்து வந்தோம்.

2008 ஆம் ஆண்டுவரை கடற்றொழிலுக்காக மாத்திரம் இரணை தீவுக்குச் சென்று வந்தோம்.

அதன்பின்னர் இராணுவ நடவடிக்கையால் புதுமாத்தளன் – முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்து சென்றோம்.

இராணுவத்தினரால் வவுனியா முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தோம்.

அதன் பின்னர் எம்மை மீளவும் இரணை மாதா நகரில் மீள்குடியமர்த்தினார்கள்.

எம்மை இரணை தீவில் மீள்குடியமர்த்தி தொழில் செய்ய அனுமதிக்குமாறு 2013 ஆம் ஆண்டிலிருந்து அரச அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

ஆனால் எமது கோரிக்கைகளில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.

அதனால் 2017 மே முதலாம் திகதி தொடக்கம் கடற்கரையில் எமது போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

போராட்ட இடத்துக்கு வந்து சந்திக்கும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை எமக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் எனச் சொல்லிச் சொல்லி ஒரு வருடமாகப் போய்விட்டது.

இந்த நிலையில்தான் கடந்த 23 ஆம் திகதி இரணை தீவுக்கு நாம் சென்றோம். அங்கு போய் தங்கியிருக்கும் எம்மை எந்தவொரு அரசியல்வாதியோ, அரச அதிகாரியோ வந்து சந்திக்கவில்லை.

என்ன செய்யவுள்ளீர்கள், என்று எவருமே வந்து கேட்கவுமில்லை – வந்து பார்க்கவுமில்லை.

அங்கு இருக்கும் கடற்படையினர் கூட எம்மை வந்து சந்திப்பதில்லை. அங்கு இருந்துகொண்டு கடற்றொழிலை செய்யக்கூடிய வாய்ப்புவசதி எமக்கு இருக்கின்றது.

அதற்கு எமது காணிகளை கடற்படையினர் விடுவிக்கவேண்டும்” என்று அந்த மக்கள் சார்பில் தெரிவித்தார் விஜயகுமார் அன்பரசி.

(tamilnews iranaitiv people human rights commission complain)

More Tamil News

Time Tamil News Group websites :