(Thailand Whale Dies Effect Plastic Garbage Shocking News)
பிளாஸ்டிக் மற்றும் பாலீதின் பயன்பாட்டால் சுற்றுப்புறச்சூழல் மாசு, கடல்வளம், நிலத்தடி நீர்மட்டம், மண்வளம், விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இவை கடலில் வீசப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு அதிகளவில் இறந்து வருகின்றன.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரையில், திமிங்கலம் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது.
அந்த திமிங்கலத்துக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் அந்த திமிங்கலம் உணவு உண்ணாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த திமிங்கலத்தை சோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனால் தான் திமிங்கலத்தால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதால், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினர்.
5 நாள் சிகிச்சைக்கு பின் திமிங்கலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகள் வெளியேறின.
சிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பைகள் திமிங்கலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.