இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை; இலங்கை அரசாங்கம் கனடா மீது அதிருப்தி

0
186

இலங்கையில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய இனப்படுகொலை என்ற தவறான உயர்மட்ட அறிவிப்புகள் தொடர்பாக கனடாவிடம் இலங்கை அரசு சார்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, கனேடிய சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டோபர் மெக்லெனனை கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

இதன்போது அருணி விஜேவர்தன, பொருளாதார ஸ்திரப்படுத்தலில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து கனேடிய அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இந்த முயற்சிகள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணையாக இயங்குகின்றன.

எனினும் இனப்படுகொலை என்ற கனடாவின் உயர்மட்ட அறிவிப்புகள் குறித்து கவலை வெளியிட்ட இலங்கையின் வெளிவிவகார செயலாளர் இலங்கையுடன் ஆக்கபூர்வமான முறையில் ஈடுபடுமாறும் உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை எளிதாக்குமாறும் கனேடிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கனேடிய பிரதி அமைச்சர், இலங்கையின் செய்தி கனடாவிலுள்ள உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.