யாழில் பொலிஸாரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

0
105

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ஐந்து பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் வியாழக்கிழமை (30) நிராகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் இந்த வழக்கு நேற்று (29) தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெடுப்பதற்கான உரிமை சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை (31) யாழ்ப்பாணம் வருகிறார்.

யாழில் பொலிஸாரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் | Court Rejects Jaffna Police S Petition

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் வகையில் ஐந்து பேருக்கு தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனர்.

இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (30) முன்வைக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் கட்டளை இட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக தடை கட்டளை கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.