சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணையத்திற்கு சுகாதார சேவை அதிகாரிகள் அழைப்பு

0
59

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள (Colombo) தலைமைக் காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் கடந்த 05.07.2024 அன்று அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் பொதுமக்கள் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த களவிஜயத்தில் அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை அந்த கலந்துரையாடலிற்கான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளளது.

எதிர்வரும் 30.07.2024 பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு பின்வருவோருக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி செயலாளர் – சுகாதார அமைச்சு (Ministry of Health) – கொழும்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் – சுகாதார அமைச்சு – கொழும்பு, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – வடக்கு மாகாணம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – வடக்கு மாகாணம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் – யாழ்ப்பாணம், மருத்துவ அத்தியட்சகர் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.